வாஷிங்டன்: அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தென்-கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவைப் பலப்படுத்துவதற்காக நேற்று தமது பயணத்தைத் தொடங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அமைச்சர் ஒருவர் இவ்வட்டாரத்துக்கு வருவது இதுவே முதல் முறை.
சீனா தனது ஆதிக்கத்தை விரிவுடுத்தி செல்வாக்கைப் பெருக்கி வரும் வேளையில் வட்டார நாடுகளுடன் உறவைப் பலப்படுத்திக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக அமைச்சர் லாயிட் ஆஸ்டினின் பயணம் இடம்பெறுகிறது.
அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையில் சீனாவின் சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
பெய்ஜிங்குடனான போட்டியை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோதனை என்றும் பைடன் நிர்வாகம் கருதுகிறது. திரு பைடன் அதிபராகப் பொறுப்பு ஏற்று ஆறு மாதமான நிலையில் பைடனின் உத்தியை அறிந்துகொள்ள தென்-கிழக்கு ஆசிய நாடுகள் காத்துக் கிடக்கின்றன. பொருளியல், வர்த்தகம், இந்தோ-பசிபிக் வட்டாரத்துடன் ராணுவ ஈடுபாடு போன்றவற்றில் அமெரிக்காவின் பங்கு குறித்தும் வட்டார நாடுகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றன.
இந்த நிலையில் அலாஸ்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆஸ்டின், பங்காளித்துவம் மற்றும் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் பற்றி விைரவில் தெரிந்துகொள்வீர்கள் என்றார்.
"உறவைப் பலப்படுத்துவதே என்னுடைய இலக்கு," என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இன்று முக்கிய உரையாற்றவிருக்கும் திரு ஆஸ்டின், தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் வியட்னாம், பிலிப்பீன்சில் நடைபெறும் சந்திப்புகளில் அவர் பங்கேற்கிறார்.தென்சீனக் கடற்பகுதியை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் வைத்திருப்பதன் அவசியத்தையும் தனது பயணத்தில் அமைச்சர் ஆஸ்டின் எடுத்துரைக்கவிருக்கிறார்.

