கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசாங்கம் அதிர்ச்சிகரமான ஓர் அறிவிப்பைக் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதாவது, இதுவரையிலும் நடப்பில் இருந்த தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மீட்டுக்கொள்ளப்படுவதாக அந்நாடு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அரசாங்கத்தின் அதிரடியான இந்த அறிவிப்பு அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு அரசாங்கம் சரியான விளக்கம் தர வேண்டும் என்று நேற்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
ஜனநாயக செயல் கட்சியின் துணைத்தலைவர் கோபின் சிங் டியோ, "அரசாங்கம் இந்தக் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது குறித்து எங்களுக்கு ஏன் முன்னதாக அறிவிக்கப்படவில்லை. அந்தக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் எப்போதில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இது யாருடைய முடிவு? சட்டத்திற்குட்பட்டு எடுக்கப்பட்ட முடிவா? இந்தக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுவதால் நாட்டு மக்கள் பரந்த அளவில் எவ்வாறு பாதிக்கப்படுவர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மலேசியாவில் தொற்றுக்கு எதிரான அவசரநிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டபோது அங்கு தினசரி சராசரி தொற்று எண்ணிக்கை வெறும் 3,000 ஆக இருந்தது. ஆனால் இப்போது 14,000 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது மக்களிடமும் அந்நாட்டு எதிர்க்கட்சியினரிடமும் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

