லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள யூட்டா மாநிலத்தில் உள்ள பாலைவன விரைவுச்சாலையில் நேற்று வீசிய கடுமையான மணற்புயலில் சிக்கி எட்டுப் பேர் மாண்டனர்.
விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்துகளில் இவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் கூறினார்.
மாண்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
யூட்டா மாநிலத்தின் சால்ட் லேக் சிட்டிக்குத் தெற்கே 242 கி.மீ. தொலைவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் மொத்தம் 22 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன என்று உத்தா மாநிலத்தின் பொது பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் வாகனங்கள் மோதிக்கொண்டு சாலைகளில், வாகனங்களில் உதிரிப்பாகங்கள் சிதறிக்கிடந்ததை அந்தச் சாலையில் நகரமுடியாமல் மணிக்கணக்கில் காத்திருந்த வாகனங்களில் இருந்த சிலர், படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
அவற்றில் ஒரு படத்தில், ஒரு சிவப்பு நிற கார், பெரிய கனரக வாகனத்தில் மோதி, அதன் முன்பகுதி நசுங்கியவாறு செங்குத்தாக நிற்பது போன்ற ஒரு காட்சியைக் காணமுடிந்தது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த யூட்டா மாநிலத்தின் ஆளுநர் ஸ்பென்சர் கோக்ஸ், இந்தக் கொடூரமான விபத்து மிகப்பெரிய வருத்தத்தைத் தந்துள்ளது என்று கூறினார்.
இந்த விரைவுச்சாலைப் பகுதியில் மணல் புயல் என்பது வழக்கமானது என்பதால் அவ்வப்போது வானிலை நிலையம், இது குறித்து எச்சரிக்கை விடுக்கும். அதுபோன்று அந்த வட்டாரத்தில் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.