டுட்டர்டே: தொற்றை துடைத்தொழித்து
நாட்டின் பொருளியலை மீட்டெடுப்பேன்
மணிலா: கொவிட்-19 தொற்றை முற்றிலுமாகத் துடைத்தொழித்து பிலிப்பீன்சைக் காப்பாற்றப்போவதாக அந்நாட்டு அதிபர் டுட்டர்டே நேற்று முன்தினம் உறுதியளித்துள்ளார். அத்துடன் தொற்றால் படுபாதாளத்தில் வீழ்ச்சி கண்டுள்ள நாட்டின் பொருளியலை தூக்கி நிறுத்துவதற்கான பல திட்டங்கள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இவற்றை தனது கடைசியாண்டுப் பதவிக் காலத்திற்குள் செய்துமுடிக்கப்போவதாக அவர் சூளுரைத்துள்ளார். போதைப்பொருள், குற்றச்செயல்கள், ஊழல் போன்றவற்றை ஒழிப்பேன் என்று நான் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றிவிட்டேன். அதுபோல் இந்த முறை கொவிட்-19 தொற்றை முற்றிலுமாகத் துடைத்தொழித்து பொருளியல் மீட்சி காண வழி வகுப்பேன் என்று கூறியுள்ளார். பிலிப்பீன்சில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.6 மில்லியனை நெருங்கியுள்ளது. இதுவரை தொற்றால் 27,000 பேர் பலியாகியுள்ளனர். தென்கிழக்காசிய நாடுகளிலேயே கொவிட்-19 இரண்டாவது அலையால் பிலிப்பீன்ஸ்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கு புதிய சீனத் தூதர்
பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மோசமடைந்திருக்கும் இவ்வேளையில் அமெரிக்காவுக்கான புதிய தூதராக திரு கின் காங் என்பவரை, சீனா அறிவிக்கவுள்ளது.
தற்போது அமெரிக்காவில் சீனாவின் தூதராக உள்ள 68 வயது திரு குய் டியாங்க் ஓய்வுபெறுவதால் திரு கின் அந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. திரு குய், அமெரிக்காவில் சீனத் தூதராகப் பதவியேற்று கடந்த மாதத்தோடு எட்டு ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. புதிதாகப் பதவியேற்கவிருக்கும் திரு கின், சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சராவார். இவருக்கு அமெரிக்கா தொடர்பான விவகாரங்களில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லை என்று கூறப்படுகிறது.
தென்கொரியா - வடகொரியா நாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடித் தொலைத்தொடர்பு
சோல்: வடகொரியா, தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று கொண்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுத்து, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் இணக்கம் கண்டுள்ளன என்று அந்நாட்டின் கேசிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது. அந்த வகையில் அந்த இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான நேரடித் தொலைத்தொடர்புக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளன. அந்தத் தொடர்பு நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் நடப்புக்கு வந்ததாக அந்த ஊடகம் தெரிவித்தது. தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களின் அடிப்படையின் அந்த இரண்டு தலைவர்களும் மீண்டும் தங்களுக்கிடையேயான தொலைத்தொடர்பை நடைமுறைக்குக் கொண்டுவர இணங்கியுள்ளனர்.

