சிட்னி: சிட்னியில் கிருமித்தொற்று உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதால் அந்நகரம் மேலும் ஒரு மாதம் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசியால் மட்டும் முடக்கநிலை முடிவுக்கு வராது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆகப்பெரிய நகரமான சிட்னியில் உருமாறிய டெல்டா கிருமியால் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இது குறித்து பேசிய திரு மோரிசன், "தடுப்பூசி போடுவதை வேகப் படுத்த முடியும். சிட்னி முடக்கப்பட்டு தடுப்பூசியும் போடுவதால் தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடியும். அதற்கு என்னால் உதவி செய்ய முடியும். ஆனால் தடுப்பூசி மட்டுமே முடக்கநிலையை முடிவுக்கு கொண்டு வராது," என்றார்.
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் உள்ளது. நேற்று இந்த மாநிலத்தில் கிருமித்தொற்று புதிய உச்சத்தைத் தொட்டது.
அன்று ஒரு நாள் மட்டும் 239 பேர் பாதிக்கப்பட்டனர். இதற்கு முந்தைய நாளன்று 177 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
சிட்னியில் முடக்கநிலை நீட்டிக்கப்பட்டு தொற்று ஏற்படக்கூடிய மோசமான இடங்களில் நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பின் பற்றினால் டெல்டா கிருமியை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று திரு மோரிசன் குறிப்பிட்டார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 17 விழுக்காட்டினர் மட்டுமே இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர்.
தலைநகரமான சிட்னியில் தொற்று அதிகரித்துள்ளைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதியிலிருந்து அந்நகரம் முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் இதுவரை இந்த மாநிலத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 165 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
56 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அவர்களில் 22 பேருக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

