வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தனது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தாய்லாந்து, கம்போடியாவுக்கு மில்லியன் கணக்கான முறை போடக்கூடிய தடுப்பூசிகளை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது.
சென்ற புதன்கிழமை அன்று 1.5 மில்லியன் முறை போடக்கூடிய ஃபைசர் தடுப்பூசிகள் தாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவை வெள்ளிக்கிழமை (இன்று) தாய்லாந்து வந்து சேரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலகளாவிய கோவாக்ஸ் திட்டத்தின் ஓர் அங்கமாக மேலும் 1.06 மில்லியன் முறை போடக்கூடிய ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை கம்போடியாவுக்கு அமெரிக்கா அனுப்பியது.
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் இரு விமானங்களில் இந்தத் தடுப்பூசிகள் கம்போடியாவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
திரு பைடனின் நிர்வாகம், 80 மில்லியன் முறை போடக்கூடிய ஃபைசர், மொடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது.
உலகம் முழுவதும் குறைந்தது 580 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டமாகும்.

