சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் உதவுவதற்காக ராணுவ வீரர்களை ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஐந்து வாரங்களாக முடக்கநிலை நடப்பில் இருந்தாலும் டெல்டா வகை கிருமித்தொற்று காரணமாக சிட்னியில் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் தற்போதைய முடக்கநிலை ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று 170 பேர் தொற்றுக்கு ஆளாகினர். முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 239ஆக இருந்தது.
இந்நிலையில், வரும் திங்கட்
கிழமை முதல் சுமார் 300 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றுக்காவல் பணியில் காவல்துறையினருக்கு உதவுவர்.
அதற்கு முன் அவர்களுக்கு கட்டுப்பாட்டு சுற்றுக்காவல் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களது இடத்தில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்களா என்பதை வீடு வீடாக சென்று உறுதி செய்ய போலிசாருக்கு ராணுவ வீரர்கள் உதவுவார்கள் என்றார் நியூ சௌத் வேல்ஸ் போலிஸ் ஆணையர் மிக் ஃபுல்லர்.
10 கி.மீ. பயண வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதையும் அவர்கள் உறுதி செய்வார்கள்.
சிட்னி முழுவதும் போலிசாரும் ராணுவ வீரர்களும் இந்த பணியை மேற்கொள்வார்கள் என்றாலும் கிருமிப் பரவல் புதிதாக தலைதூக்கியுள்ள எட்டு மாவட்டங்களில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முடக்கநிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் சிட்னியில் இன்று மேலும் ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் கிருமித் தொற்றை தாங்களாகவே போய் தேடிக் கொள்ள வேண்டாம் என்றும் நியூசௌத் வேல்ஸ் மாநில முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, ஆஸ்திரேலிய மக்கட்தொகையில் 70 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவுடன், பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்றும் முடக்கநிலை நடைமுறைப்படுத்துவது தவிர்க்கப்படும் என்றார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன். தகுதி பெறும் அனைவருக்கும் இவ்வாண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் சொன்னார்.

