சீனாவின் நான்சிங்கில் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
ஷாங்காய்: சீனாவில் அண்மைய கிருமிப் பரவல் நான்சிங் நகரில் தொடங்கி, பெய்ஜிங் உள்ளிட்ட 13 நகரங்களுக்குப் பரவியுள்ளதை, வூஹானுக்குப் பிறகு மிகவும் தீவிரமான கிருமிப் பரவல் என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சீனாவில் நேற்று பதிவான 64 தொற்று சம்பவங்களில் 13 நாஞ்சிங் நகரில் பதிவானவை. தொற்று முதலில் கண்டறியப்பட்ட ஜூலை 20ஆம் தேதிக்குப் பிறகு அங்கு இதுவரை 184 பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக கிருமிப் பரவுவதற்கு டெல்டா வகை தொற்றே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
தொற்றுக்கு ஆளானவர்களில் 52 பேருக்கு டெல்டா வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹூனான், பெய்ஜிங் உள்ளிட்ட சில நகரங்களில் குறைந்தது ஒருவராவது தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு சில நகரங்களில் திரையரங்குகள், பூங்காக்கள் மூடப்பட்டன. மக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் இருந்து நான்சிங் லுகோ அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்ற விமானத்தைச் சுத்தம் செய்த ஊழியர்களிடம் முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை அங்கு அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சுகாதார நடவடிக்கைகளை துப்புரவு பணியாளர்கள் பின்பற்றவில்லை என்று ஸின்ஹுவா செய்தி கூறுகிறது.
தொற்றுக்கு ஆளானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களா, இல்லையா என்ற விவரம் தெரியவில்லை என்றாலும் டெல்டா வகை தொற்றுக்கு எதிராக சீன தடுப்பூசியின் செயல்பாடு குறித்து சீன சமூக ஊடகங்களில் கேள்வி எழுந்துள்ளது.

