ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம்: குற்றவாளிக்கு 9 ஆண்டு சிறை
ஹாங்காங்: தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது, பிரிவினைவாதத்தைத் தூண்டியது ஆகியவற்றுக்காக ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு
உள்ளது.
டோங் யிங்-கிட், 24 எனும் அந்த ஆடவர், 'ஹாங்காங்கை விடுவிக்கவும்' என்ற வாசகம் பொறித்த கொடி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை, மூன்று கலகத் தடுப்பு போலிஸ்காரர்கள் மீது ஏற்றியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. டோங்கின் வழக்கறிஞர் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக சொன்னார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு சவூதி அரேபியா அனுமதி
ரியாத்: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கவுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
சவூதி அரேபியா அனுமதி அளித்துள்ள ஃபைசர், ஆஸ்ட்ர ஸெனகா, மொடர்னா அல்லது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட வர்கள் தனிமைப்படுத்தல் இல்லாமல் அங்கு பயணம் செய்யலாம். இருப்பினும், உம்ரா பயணம் மீதான கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் அறிவிக்கப்படவில்லை.
தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு: நியூயார்க் மேயர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஃபுளோரிடா, கலிஃபோர்னியா, டெக்சஸ், லூசியானா ஆகிய மாநிலங்களில் அன்றாட பாதிப்பு அதிகரித்து உள்ளது.
இதையடுத்து, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஜூலை 30 முதல் செப்டம்பர் 2வது வாரத் திற்குள் முதல் முறை தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என நியூயார்க் நகர மேயர்
டெ பிளாசியோ அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கூடுதல் தடுப்பூசி
ஜெருசலேம்: இஸ்ரேலில் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு ஃபைசர் கூடுதல் தடுப்பூசி போட அதாவது 3வது முறை போடுவதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்காக, இஸ்ரேல் அரசு கூடுதல் தடுப்பூசி போட முடிவு செய்துள்ளது.
இதை அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் தொடங்கி வைக்க உள்ள நிலையில், அதிபர் ஐசக் ஹெர்சோக்கிற்கு முதல் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அந்நாட்டில் 57 விழுக்காட்டினருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

