பெய்ஜிங்: உலகையே நிலைகுலையச் செய்து இன்னமும் அச்சுறுத்தலாக இருந்துவரும் கொரோனா கிருமித்தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் அங்கு ஏழு சமூகத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நகரில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் கொரோனா தொற்றுச் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வாழும் 11 மில்லியன் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் கூறினர்.
2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அங்கு முழுமையான முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு சமூகத்தொற்றுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. பின்னர் ஓராண்டு கழித்து இப்போது வெளிநாட்டு ஊழியர்களிடையே சமூகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் அண்மைய காலங்களில் பெரிய அளவில் தொற்று பரவி வருவதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து அங்கு தொற்றைக் கண்டறிய தீவிர சோதனை மேற்கொள்ளும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடைசியாக வந்த தகவலின்படி சீனாவின் 18 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்களில் 400 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஜியாங்சு மாநிலத்தைச் சேர்ந்தோர் மட்டும் 284 பேர்.
அதிவேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தொற்றே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 83 சமூகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார வாரியம் நேற்று தெரிவித்தது.
ஜூலை 10ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து நன்ஜிங் நகரின் முக்கிய விமானத் தளத்தில் வந்திறங்கிய விமானத்தில் இருந்து இந்தத் தொற்று பரவியிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புவதாகக் கூறப்படுகிறது. சீனாவின் பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மில்லியன் கணக்கானோர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். யாங்சௌ நகரின் கிழக்கில் அமைந்துள்ள நான்ஜிங் நகரில் 40 புதிய தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்குமாறு அந்நகரத்தின் மக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் யாங்சோ நகரில் வசிக்கும் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர், வீடுகளில் முடங்கிக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வர அனுமதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், சீனாவின் தலைநகரான பெய்ஜிங், தொற்று பாதிக்கப்பட்ட நகரங்களில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது. அத்துடன் உள்ளூர் மக்கள் கோடைக்கால விடுமுறையைக் கழிக்க வெளியூர் செல்லும் திட்டத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஜூலை மாத நடுப்பகுதியில் மட்டும் 400க்கு மேற்பட்ட தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி தெரிவித்தது.