ஜோகூர்பாரு: மலேசிய முன்னாள் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் சையது சாதிக் சையது அப்துல் ரஹ்மான் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற வேலைகளில் ஈடுபட்டதாக நேற்று ஜோகூர் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 29 வயதுள்ள மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சையது 100,000 மலேசிய ரிங்கிட் ($32,000) மதிப்புள்ள தொகை தொடர்புடைய இந்த வழக்கில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
குற்றச்சாட்டு அறிக்கையின்படி, அவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி, தனது வங்கிக் கணக்கில் இருந்து அமனா சாஹம் பூமிபுத்ரா என்ற வங்கியின் தனது இன்னொரு கணக்குக்கு மாற்றிவிட்டுள்ளார். அதே ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அடுத்து 50,000 ரிங்கிட்டை மாற்றிவிட்டுள்ளார்.
அவ்வாறு மாற்றிவிடப்பட்ட தொகை யாவும், சட்டவிரோதபணப்பரிவர்த்தனை மூலம் கைமாறிய பணம் என்று கூறப்படுகிறது. தனக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் கிடைத்த பணத்தை அவர், ஜோகூர்பாரு, தாமான் பெர்லிங்கில் உள்ள ஒரு வங்கியில் இருந்து தனது இன்னொரு வங்கிக்கு மாற்றிவிட்டதாக அந்த குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சையது சாதிக் மீது சுமத்தப்பட்டுள்ள முதல் குற்றச்சாட்டில், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பெர்சாத்து கட்சியின் இளையர் பிரிவான அர்மடா மலேசியாவுக்கான நிதியை அவர் கட்சித் தலைமையின் ஒப்புதல் இன்றி, காசோலை மூலம் திரும்பப்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
இந்தச் சம்பவம் 2020ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கோலாலம்பூர் சென்ட்ரலில் உள்ள சிஐஎம்பி வங்கியில் நடந்தது.
இரண்டாவது குற்றச்சாட்டில், சையது சாதிக் பெர்சாத்துக் கட்சிக்குச் சொந்தமான 120,000 வெள்ளியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சம்பவம் 2018 ஏப்ரல் 8ஆம் தேதி தாமான் பாண்டான் ஜெயாவில் உள்ள மேபேங்க் வங்கியில் நடந்ததாகக் கூறப்படுகிறது.