கோலாலம்பூர்: முன்பதிவு செய்யாமல் கொவிட்-19 தடுப்பூசி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறையை மலேசிய அரசாங்கம் கிள்ளான் பள்ளத்தாக்கில் முதலில் அறிமுகப்படுத்தியது.
தற்போது மலேசியாவெங்கும் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு இந்தத் திட்டம் கூடிய விரைவில் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்தோர், உடற்குறையுள்ளோர், ஏற்கெனவே மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 18 வயது அதற்கும் மேற்பட்டோர், இரண்டாவது கொவிட்-19 தடுப்
பூசியைப் போட்டுக்கொள்ள தவறியவர்கள், ஆசிரியர்கள், முன்
களப் பணியாளர்கள், கல்வி நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரின் நலன் கருதி இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டின் தடுப்பூசித் திட்டத்தை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டப் பணிக் குழு நேற்று கூறியது.
பேராக், கெடா, சாபா, மலாக்கா, சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள தடுப்பூசி நிலையங்கள் மூத்தோருக்காக இந்தத் திட்டத்தை தொடங்கிவிட்டதாக பணிக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. இந்நிலையில், மலேசியாவில் மேலும் 19,257 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இதன் மூலம் மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,243,852ஆக அதிகரித்துள்ளது. ஆக அதிகமாக சிலாங்கூர்
மாநிலத்தில் புதிதாக 7,084 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்து வருவதால் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்த
அளவுக்குப் பலன் தருகின்றன என்பது குறித்து தமது அரசாங்கம் மறுஆய்வு செய்து உத்திகளை மேம்படுத்தும் என்று மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அவர் அக்கறை தெரிவித்தார்.
இதற்கிடையே, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான சாதனங்களை ஜோகூர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் தொடர்ந்து வைத்திருப்பதை உறுதி செய்ய தனியார் துறை நன்கொடை வழங்குவது முக்கியம் என்று அம்மாநில மன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் நேற்று அழைப்பு விடுத்தார்.
"கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசாங்கம் மட்டுமே அனைத்து பாரங்களையும் சுமக்க வேண்டும் என நினைப்பது தவறு. தனியார் துறையும் நிதி உதவி வழங்கும் என நம்புகிறேன். அப்போதுதான் மருத்துவச் சாதனங்கள் மருத்துவ
மனைகளைச் சென்றடையும்," என்றார் ஜோகூர் மன்னர். ஜோகூர் அரச குடும்பத்தின் பேரின்கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு வழங்கப்படும் நன்கொடை, மருத்துவச் சாதனங்கள் வாங்குவதற்கும் வசதி குறைந்தோருக்கு உணவு வழங்கவும் பயன்படுத்தப்படும் என்றார் அவர். ஜோகூர் மாநில மருத்துவ
மனைகளுக்குத் தேவையான மருத்துவச் சாதனங்களை வாங்க ஜோகூர் மன்னர் 5 மில்லியன் ரிங்கிட் நன்கொடை வழங்குகிறார்.

