மலேசியாவில் உள்ள பதின்மவயதினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் அடுத்த மாதம் நடுப்பகுதியிலிருந்து தொடங்கும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பதின்மவயதினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மலேசியாவின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்துக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 1ஆம் தேதி மலேசியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவர்களுக்குத் தடுப்பூசி போட பெற்றோர் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, பதின்மவயதினருக்குத் தடுப்பூசி போட மலேசிய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
மாணவர்களிடையே கொவிட்-19 கிருமி பரவியதை அடுத்து, மலேசியாவில் கடந்த மே மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.
மலேசியாவில் நேற்று (ஆகஸ்ட் 12) புதிய உச்சமாக 21,668 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. கிருமித்தொற்று காரணமாக மேலும் 318 பேர் உயிரிழந்தனர்.

