தற்போது தொற்று நிலவிவரும் வெஸ்ட்லைட் ஜுனிபர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதித் தொற்றுக் குழுமத்தின் முதல் தொற்று, கடந்த ஜூலை 24ஆம் தேதி நடந்த வழக்கமான அட்டவணை முறைப் பரிசோதனைகளில் தெரிய வந்ததாக மனித வள அமைச்சு கூறியுள்ளது.
அத்தொற்றுக் குழுமத்தில் நேற்று முன்தின நிலவரப்படி 48 தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தன.
மண்டாயில் இருக்கும் அந்தத் தங்கும் விடுதியில் தொற்றுக் குழுமம் உருவானதாக சுகாதார அமைச்சு கடந்த ஜூலை 27ஆம் தேதி அறிவித்தது. அப்போது ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.
தொற்றுக் குழுமத்தில் இருந்த ஆறு பேர் அங்கு தொற்று ஏற்பட்ட முதல் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்று மனிதவள அமைச்சு நேற்றுமுன்தினம் ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
மற்ற தொற்றுச் சம்பவங்கள் முன்னெச்செரிக்கையாக மேற்கொள்ளப்பட்ட கிருமிப் பரிசோதனைகள் அல்லது அட்டவனைபடிசெய்த சோதனைகளில் கண்டறியப்பட்டது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
அவர்களுக்கு தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை அல்லது இலேசான அறிகுறிகள் இருந்தன என்றும் அவர்கள் சிகிச்சைக்காக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அமைச்சு கூறியது.
முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளாக, தொற்றுள்ளவர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுவிட்டனர். மேலும், வெஸ்ட்லைட் ஜுனிபர் தங்குவிடுதியில் உள்ள எல்லா வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கிருமிப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
மேலும், வாரத்துக்கு ஒரு நாள் பெயர் பட்டியலின்படி அவர்களுக்கு கிருமிப் பரிசோதனை மேற்றகொள்ளப்படும் என்றும் அது கூறியது.
தங்குவிடுதியை நடத்தும் வெஸ்ட்லைட் அகாமடேஷன் நிறுவனம், ஜூலையில் விடுதியில் 1,408 பேர் இருந்தனர் என்று கூறியது. விடுதியில் அதிகபட்சமாக 1,900 பேர் வரை தங்கலாம்.
தொற்றுக் குழுமம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், சுமார் 500 ஊழியர்கள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்துதல் வளாகங்களுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களில் 380 பேர் விடுதி திரும்பியுள்ளதாகவும் விடுதியில் உள்ள அனைவரும் வேலைக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நிறுவனம் தெரிவித்தது.

