மலேசியாவின் பிரதமர் முகைதீன் யாசின், தமது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டின் மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவிடம் நாளை தரவுள்ளார். இருந்தபோதும் தமது பெரிக்கத்தான் நேசனல் கூட்டணி, நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையைத் தக்க வைத்திருப்பதாக மன்னரிடம் உறுதியளித்தார்.
" நாம் இப்போதுதான் சந்திப்பை நடத்தினோம். நாளை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும். அதன் பிறகு, அவர் தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்க இஸ்தானா நெகாரா அரண்மனைக்குச் செல்லவிருக்கிறார்," என்று பிரதமர் அலுவலக பேச்சாளர் ரிட்சுவான் யூசப் தெரிவித்தார்.
தங்கள் கட்சி வசம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் எல்லாம் இனி மன்னரின் முடிவில் இருப்பதாகவும் அவர் க் கூறினார். நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு 111 தேவை. ஆயினும், திரு அன்வார் இப்ராஹிம் வழிநடத்தும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் 88 எதிர்க்கட்சி உறுப்பினர்களே உள்ளனர்.
தாங்கள் அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவதாகவும் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தலைமைத்துவத்தை உறுதி செய்யும் பொறுப்பு இப்போது மாமன்னரிடம் இருப்பதாகவும் பிரதமர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

