சோல்: தென்கொரியாத் தலைநகர் சோலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக் கையாள காவல்துறையினர் நூற்றுக்கணக்கான பேருந்துகளைத் தடுப்புகளாகப் பயன்படுத்தியுள்ளனர். பல இடங்களில் சோதனைச் சாவடிகளையும் எழுப்பினர்.
கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை முறியடிக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கிருமிப் பரவலை நன்கு கையாண்ட நாடுகளில் ஒன்றாகத் தென்கொரியா திகழ்கிறது.
இருந்தாலும் அண்மைக் காலமாக அங்கு நான்காவது அலை வீசுகிறது.
சில நாட்களுக்கு முன் அங்கு முதன்முறையாக ஒரு நாளைக்கு 2,200 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
இதேபோல் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களாலும் தேவாலயத்தில் பலர் ஒன்றுகூடியதாலும் 1,800 பேருக்கு மேல் கிருமித்தொற்று ஏற்பட்டது.
அதைக் கருத்தில்கொண்ட தென்கொரிய அரசாங்கம் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரைத் தண்டிக்கப்போவதாக உறுதியளித்திருந்தது.
இருந்தாலும் எச்சரிக்கைகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு சிலர் தொடர்ந்து ஊக்குவித்ததை அந்நாட்டின் உள்ளூர் ஒளிவழிகளில் வெளியான காணொளிகள் தெரிவித்தன. ஆனால் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டோரிடையே போதுமான தூர இடைவெளி இருந்தது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய ஓர் அமைப்பைக் காவல்துறையினர் நேற்று முன்தினம் கலைத்தனர். மேலும், கடந்த மே மாதத்திலிருந்து சட்டவிரோதமாகப் பல ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்த ஓர் ஊழியரணித் தலைவருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.

