காபூல்: ஆப்கானிஸ்தான் தலை
நகர் காபூலையும் அங்குள்ள
அதிபர் மாளிகையையும் தலிபான் நேற்று கைப்பற்றியது.
அமெரிக்கப் படையினர் வெளியேறிய சில நாட்களிலேயே மின்னல் வேகத்தில் தலைநகர் காபூலை தலிபான் கைப்பற்றியிருப்பது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அதிபர் பைடன் எடுத்த தவறான முடிவால் தலிபான் மீண்டும்
ஆட்சிக்கு வந்துள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியுள்ளார்.
"இது பைடனுக்குப் பெரிய அவமானம். ஆப்கானிஸ்தானில் இந்தக் கொடுமை நிகழ அனுமதித்ததற்கு அவர் பதவி விலக வேண்டும்," என்றார் திரு டிரம்ப்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலை அடுத்து, தலிபானின் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானை தலிபான் மீண்டும் கைப்பற்றியிருப்பதால் இவ்வளவு காலம் அங்கு போர் புரிந்து மாண்ட அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்களது உயிர்த்
தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டதாக மாண்ட அமெரிக்கப் படையினரின் குடும்பத்தினர் குமுறுகின்றனர்.
அமெரிக்க வீரர்கள் எதற்காகப் பாடுபட்டார்களோ அதை மிக எளிதில் அமெரிக்க அரசாங்கம் தாரைவார்த்துவிட்டதாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
தலைநகர் காபூலுடன் நாட்டின் பல பகுதிகளைத் தனது கட்டுக்குள் தலிபான் கொண்டுவந்துவிட்டதால் இனி 20 ஆண்டுக்கு முன்பு அந்த அமைப்பு நடத்திய ஆட்சிமுறை மீண்டும் நடப்புக்கு வரும் என்று ஆப்கான் மக்கள் கவலை தெரிவித்தனர். தங்களுக்கு இனி சுதந்திரம் இல்லை என்று அவர்களில் பலர் செய்தியாளர்களிடம் தங்கள் மனக்குறையை இறக்கிவைத்தனர். மிகக் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தலிபான் நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முன்பு போல் இல்லாமல் பெண்
களுக்கு எதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்க்க வேண்டாம் என்று ஐநா தலைவர் அண்டோனியோ குட்டேரேஸ் தலிபானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி னார். சண்டையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மிக மோசமான துன்புறுத்தல்களில் தலிபான் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து பல தகவல்கள் கிடைப்பதாக ஐநா தெரிவித்தது.
"துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஆப்கான் மக்களின் உரிமைகளும் சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும் என்று ஐநா தலைவர் தலிபானிடமும் மற்ற அமைப்பினர்களிடமும் அழைப்பு விடுத்துள்ளார்," என்று ஐநா செய்தித்தொடர்பாளர் ஸ்டீவன் டுகாரிச் கூறினார். ஆப்கான் மக்களின் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தலிபான் போராளிகளிடம் நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் குரல் கொடுத்துள்ளார். கல்வி கற்கவும் வேலை செய்யவும் ஆப்கான் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

