புத்ராஜெயா: பிரதமர் பதவியிலிருந்து திரு முகைதீன் யாசின் விலகியுள்ளபோதிலும் மலேசியாவின் அன்றாடப் பொதுச் சேவைப் பணிகள் தங்குதடையின்றி நடைபெறும் என்று மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகம்மது சுகி அலி உறுதி அளித்துள்ளார்.
அரசாங்க அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாக இருப்பதாக அவர் கூறினார்.
எனவே, நடப்பில் உள்ள திட்டங்கள் சுமுகமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.
"தடையில்லாச் சேவையை வழங்குவதில் பொதுச் சேவை கடப்பாடு கொண்டுள்ளது என நான் உறுதி அளிக்கிறேன். எவ்வித பாதிப்பும் இருக்காது," என்று திரு சுகி அலி தெரிவித்தார்.
"அன்றாடப் பணிகளை அந்தந்த அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்கள் வழிநடத்துவர்.
"நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் பொது ஒழுங்கை உறுதி செய்யவும் போலிசார், ஆயுதப் படை அதிகாரிகள் உட்பட அனைத்துப் பாதுகாப்பு படையினரும் தயார்
நிலையில் உள்ளனர்," என்று திரு சுகி அலி அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் பதவியிலிருந்து திரு முகைதீன் யாசின் நேற்று விலகியதை அடுத்து, கடந்த ஓராண்டு இல்லாத அளவில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
மலேசியாவின் அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவர் என்றும் அதன் காரணமாகப் பங்குகளின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு அமெரிக்க டாலருக்கு 4.2410 ரிங்கிட் என நேற்று பதிவானது. மலேசிய பங்குச் சந்தை குறியீடும் 0.6% குறைந்தது.

