பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் பிரயுட் சான் ஓ சாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராகப் பிரதமர் பிரயுட்டும் அவரது அரசாங்கமும் எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சிகளும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
தாய்லாந்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிருமிப் பரவலைச் சமாளிக்க திரு பிரயுட்டின் அரசாங்கம் சிரமப்படுகிறது.
இதனால் திரு பிரயுட்டைவிட திறமைமிக்க ஒருவர் பதவிக்கு வர வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. தாய்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது முடக்கநிலை நடப்பில் உள்ளது. இந்தக் கடுமையான கட்டுப்பாடுகளால் மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினரின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக திரு பிரயுட் பதவி விலக வேண்டும் எனக் கோரி அண்மைக் காலமாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பலர் சாலைகளில் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

