செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
575cf616-a07f-4686-9dcf-a572a5c4e2a0
-

இலங்கையில் கொவிட்-19 கோரத் தாண்டவம்; முடக்கநிலைக்கு அழைப்பு

கொழும்பு: இலங்கையில் கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்திருப்பதால் முடக்கநிலையை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி அந்நாட்டு அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு அந்நாட்டுச் சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிபர் கோத்தபாய ராஜபக்சே தமது ஆலோசகர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொவிட்-19 காரணமாக நேற்று ஒரே நாளில் 187 பேர் மாண்டனர். புதிதாக 3,793 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

200,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மலேசியா

கோலாலம்பூர்: சீனாவின் கேன்சீனோ பயோலிஜிஸ் நிறுவனத்திடமிருந்து 200,000 கொவிட்-19 தடுப்பூசிகளை மலேசியா நேற்று பெற்றுக்கொண்டது.

தடுப்பூசிகள் நேற்று காலை 7.50 மணி அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தன.

மலேசிய சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மது ஷஃபிக் அப்துல்லா நேரில் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுகொண்டார்.

தாய்லாந்தில் கொவிட்-19 பாதிப்பு ஒரு மில்லியனைக் கடந்தது

பேங்காக்: தாய்லாந்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று ஒரு மில்லியனைக் கடந்தது. நோய்வாய்ப்பட்டவர்களில் 97 விழுக்காட்டினருக்கு கடந்த ஐந்து மாதங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

நேற்று மேலும் 19,851 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் மேலும் 240 பேர் மாண்டதாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் கிருமிப் பரவலைத் தாய்லாந்து கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆல்ஃபா கிருமி வகையால் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, நிலைமை மாறியது.

அதையடுத்து டெல்டா கிருமி வகையும் மளமளவென பரவியதால் பலர் பாதிக்கப்பட்டனர்.