வெல்லிங்டன்: நியூசிலாந்தில் புதிதாக 21 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் எச்சரித்துள்ளார்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடப்பில் உள்ள முடக்கநிலை தொடர்பிலான விதிமுறைகள்படி செயல்படுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
5.1 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நியூசிலாந்தில் நாளை மறுதினம் வரை முடக்கநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முடக்கநிலை நடப்பில் இருக்கும்போதும் கிருமி தொடர்ந்து பரவக்கூடும்; அண்டை நாடான ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிருமிப் பரவல் சூழல் அதை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
நியூ சவுத் வேல்ஸ் தலைநகர் சிட்னியிலிருந்து வந்த பயணியிடமிருந்து நியூசிலாந்தில் மறுபடியும் கொவிட்-19 கிருமி பரவத் தொடங்கியது.