மணிலா: பிலிப்பீன்சில் சுகாதார ஊழியர்களுக்குத் தரவேண்டிய கட்டணச் சலுகைகளை வழங்க ஏற்பாடு செய்யுமாறு அந்நாட்டின் சுகாதார மற்றும் வரவுசெலவுத் துறை அமைச்சுகளுக்கு அதிபர் ரோட்ரிகோ டுட்டார்டே உத்தரவிட்டுள்ளார். கட்டணங்களைச் செலுத்த அவர் இந்த அமைச்சுகளுக்கு 10 நாட்கள் அவகாசம் தந்துள்ளார். வேலையிலிருந்து விலகப்போவதாகப் பாதிக்கப்பட்ட தாதியரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஊழியரணிகளும் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
"அவர்களுக்குப் பணத்தைக் கொடுங்கள். எவ்வளவு பணம் இருக்கிறதோ அதைப் பயன்படுத்துங்கள்," எனத் திரு டுட்டார்டே பிலிப்பீன்சின் சுகாதார அமைச்சர் ஃபிரான்சிஸ்கோ டுக்கேயிடம் கூறினார். பிலிப்பீன்சில் கொவிட்-19 பிரச்சினையைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் சுகாதார அமைச்சு இதுவரை சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்துள்ளது.
அதன் தொடர்பிலும் சுகாதார ஊழியர்களைச் சேரவேண்டியதைத் தருவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்துள்ளன.
டெல்டா வகை கொவிட்-19 கிருமி நாடு முழுவதும் மோசமாகப் பரவிவரும் வேளையில் சுகாதார ஊழியர்கள் அதுவும் குறிப்பாக தாதியர் பணியில் ஈடுபடாமல் இருப்பது கவலை தரும் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்ற அச்சம் பிலிப்பீன்சில் எழுந்துள்ளது.
சென்ற ஆண்டு பிலிப்பீன்சின் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 40 விழுக்காட்டு தாதியர் வேலையிலிருந்து விலகியதாக அந்நாட்டின் தனியார் மருத்துவமனைகள் சங்கம் தெரிவித்தது.
பொது மருத்துவமனைகளும் இத்தகைய சவால்களை எதிர்நோக்குகின்றன.

