காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு இருப்பவர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்று, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அவ்விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது குடிமக்களை எச்சரித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தலிபான்வசமாகிவிட்டதால், அதன் ஆட்சிப் பிடியிலிருந்து தப்பிக்க விரும்பி, பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
அவ்விமான நிலையத்திலிருந்து இதுவரை 82,000க்கும் மேற்பட்டோர் விமானங்கள் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 31ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் தங்களது குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை பல நாடுகளும் விரைவுபடுத்தியுள்ளன.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் நேற்றும் காபூல் விமான நிலைய நுழைவாயில்களின்முன் ஏராளமானோர் திரண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராணுவ விமானங்கள் மூலமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களைக் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் காரணமாக, விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் விரைவில் முடிவிற்கு வரலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 1,500 அமெரிக்கர்கள் இன்னும் ஆப்கானில் இருக்கலாம் என்றும் அவர்களைக் கண்டறிய விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறினார்.
இப்போது அமெரிக்க வீரர்கள் 5,800 பேரும் பிரிட்டிஷ் படையினர் 1,000 பேரும் காபூல் விமான நிலையத்தைத் தற்காத்து வருவதாக பிபிசி செய்தி குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அந்த விமான நிலையத்திற்கு வெளியே உள்ள பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியை தமது
படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தலிபான் தரப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“எங்களுக்கும் ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இருக்கிறது. எங்களது படையினரும் உயிருக்கு ஆபத்தான சூழலில்தான் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று அவர் சொன்னார்.