வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஐஎஸ்-கே பிரிவில் திட்டமிடும் பணியில் உள்ள ஒருவரைக் கொன்றுவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று காபூல் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் அவர் மாண்டதாக அமெரிக்க ராணுவம் சொன்னது.
விமான நிலையத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
மாண்ட ஐஎஸ் உறுப்பினர் மீது குறிவைத்து நங்கர்ஹார் மாநிலத்தில் வானூர்தித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
தாக்குதலின்போது மாண்டவர் மற்றோர் ஐஎஸ் உறுப்பினருடன் ஒரு வாகனத்தில் இருந்திருக்கிறார்.
இருவரும் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.
தாக்குதல் ஆப்கானிஸ்தானுக்கு வெளியிலிருந்து நிகழ்த்தப்பட்டது.
அதில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை என்று அமெரிக்க ராணுவ அதிகாரியான கேப்டன் பில் அர்பன் சொன்னார்.
காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டனர்.
குறைந்தது 13 அமெரிக்கத் துருப்புகள், நாட்டிலிருந்து வெளியேற முயன்ற ஆப்கானிஸ்தான் மக்கள் உள்ளிட்டோர் மாண்டோரில் அடங்குவர்.
மாண்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200ஆக அதிகரித்திருக்கக்கூடும் எனச் சில ஊடகங்கள் கூறுகின்றன.
இச்செயலை மன்னிக்கப்போவதோ மறக்கப்போவதோ இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.
இதற்குக் காரணமானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டனையை அனுபவிக்கச் செய்யப்போவதாகவும் திரு பைடன் சொன்னார்.

