உள்ளூரில் புதிதாக 124 பேருக்கு கொவிட்-19 தொற்று

உள்ளூரில் புதிதாக 124 பேருக்கு கொவிட்-19 தொற்று

1 mins read
4f4d1e19-dbdd-4229-a816-1556bdf86732
-
Google News Preferred Icon

உள்ளூரில் இன்று (ஆகஸ்ட் 29) பிற்பகல் நிலவரப்படி புதிதாக 124 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 21 பேர், பூகிஸ் ஜங்ஷன் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள். கடந்த செவ்வாய்க்கிழமை உருவெடுத்த இந்தத் தொற்றுக் குழுமத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.

உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் 37 பேர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.

முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்த 32 பேருக்குக் கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று கண்டறியப்பட்டது.

எஞ்சிய 34 பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.

உள்ளூரில் கிருமி தொற்றியவர்களில் ஒருவர் ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர். அவருக்குக் கடுமையான நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒன்பது பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வந்திறங்கியபோது அவர்களில் மூவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இங்கு வந்த பிறகு தங்குமிடத்தில் இருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்தபோது எஞ்சிய அறுவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,304 ஆக உள்ளது.