காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
ஆகக் கடைசி நிலவரப்படி சம்பவம் குறித்து மேல்விவரங்கள் ஏதும் இல்லை. உயிரிழப்பு நேர்ந்ததாகவோ யாரேனும் காயமுற்றதாகவோ விவரங்கள் இல்லை.
காபூல் விமான நிலையத்திற்கு அருகே உள்ள வீட்டின் மேல் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அதற்கும் அமெரிக்கத் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா எனத் தெரியவில்லை.
காபூலில் இன்னொரு தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னதாக எச்சரித்திருந்தார்.
தனது ராணுவ தளபதிகள் அது குறித்து தன்னிடம் கூறியதாகத் திரு பைடன் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து காபூல் விமான நிலைய வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டது.
சென்ற வாரம் வியாழக்கிழமையன்று விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவத் துருப்புகள் கொல்லப்பட்டனர்.
மேலும் 18 ராணுவ உறுப்பினர்கள் காயமுற்றனர். தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களை வெளியேற்றும் நடவடிக்கை கடைசி கட்டத்தில் உள்ளது. அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

