பேங்காக்: தாய்லாந்தில் இவ்வாண்டு 140 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தில் இதுவரை இல்லாத அளவில் கிருமிப் பரவல் சூழல் மோசமாக இருப்பதால் அங்கு வேகமாகப் பலருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
எனினும், கிருமி பரவுவது மெதுவடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தாய்லாந்தில் நேற்று புதிதாக 16,536 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. 264 பேர் மாண்டனர்.
இம்மாதத் தொடக்கத்தில் 23,000க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
ஒரு நாளைக்கு இத்தனை பேரிடையே கிருமி பரவியது இதுவே முதல் முறை.
புதிதாக தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருவதால் கடந்த வெள்ளிக்கிழமையன்று தலைநகர் பேங்காக்கிலும் கிருமி அதிகம் பரவும் அபாயம் உள்ள 28 மாநிலங்களிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
அவற்றுக்கிடையிலான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 'ஏஷியா ஏவியேஷன்', 'பேங்காக் ஏர்வேஸ்' உள்ளிட்ட சில நிறுவனங்கள் சில நாட்களில் தங்களின் விமானச் சேவைகளை வழங்கவிருப்பதாக ஏற்கெனவே அறிவித்தன. தாய்லாந்து, சுற்றுப்பயணத் துறைக்குப் பிரபலமான நாடு. கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலால் அதந்தத் துறை முடங்கிக்கிடக்கிறது.
அதை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஜூன் மாதம் தாய்லாந்து அதன் மக்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கியது. சுமார் 66 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அங்கு இதுவரை கிட்டத்தட்ட 11 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

