தண்ணீர் விநியோகத்தில் தடை
பெட்டாலிங் ஜெயர: நீர் விநியோக நிலையம் ஒன்றில் துர்நாற்றம் வீசுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவில் சிலாங்கூரின் 463 பகுதிகளில் திட்டமிடப்படாத தண்ணீர் விநியோகத் தடை இருக்கும் என்று சிலாங்கூர் தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது. நேற்றுக் காலை ஜென்டெராம் ஹிலீர் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோக நிலையத்தில் கண்டறியப்பட்ட துர்நாற்றத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிலாங்கூர் தண்ணீர் வாரியம் கூறியது.
போலி தடுப்பூசி சான்றிதழுக்கு லஞ்சம்; ஆணையம் விசாரணை
கோலாலம்பூர்: தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மருத்துவர்கள் போலி சான்றிதழ்கள் கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக உறுதியளித்துள்ளார் எம்ஏசிசி எனும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாகி.
"இதுகுறித்து எம்ஏசிசிக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றாலும் இதுபோன்ற முறைகேடு நடந்ததாக சந்தேகிக்கப்படும் இடங்களில் உளவுத்துறை மூலம் விசாரணை நடத்துவோம்," என்றார் அவர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் முடிவு செய்யப்படும் என்று முந்தைய பிரதமர் முகைதீன் யாசின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் கடனுதவி
ஜெருசேலம்: பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட உயர்மட்ட கூட்டத்திற்குப் பிறகு, 150 மில்லியன் அமெரிக்க டாலர் (201.5 மில்லியன் வெள்ளி) தொகையை பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் கடனாகக் கொடுக்கும் என்று இஸ்ரேல் அதிகாரிகள் கூறினர். இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு பொறுப்பு வகிக்கும் தற்காப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனுடனான ரகசியப் பேச்சுவார்த்தைக்காக ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன சுய ஆட்சி பகுதிக்குச் சென்றார்.

