வெலிங்டன்: நேற்றைய நிலவரப்படி நியூசிலாந்தில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டோர் அனைவரும் ஆக்லாந்தில் உள்ளனர்.
ஆக அண்மைய கிருமிப் பரவலின் காரணமாக அந்நகரத்தில் மொத்தம் 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சு கூறியது.
இன்று நள்ளிரவிலிருந்து ஆக்லாந்துக்கு வெளியே உள்ள மற்ற இடங்களில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை நியூசிலாந்து தளர்த்த இருக்கிறது. இந்தத் தகவலை அந்நாட்டுப் பிரதமர் ஜெசின்டா ஆர்டன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதன்படி, சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடித்து பள்ளிகள், அலுவலகங்கள், வர்த்தகங்கள் இயங்கலாம் என்று அவர் கூறினார்.