சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றின் அன்றாட பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் 1,900 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
சிட்னியிலும் மெல்பர்னிலும் முடக்கநிலை நடப்பில் உள்ளபோது டெல்டா கொவிட்-19 கிருமி வகையால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால் ஆஸ்திரேலியாவில் மூன்றாவது அலை கொவிட்-19 பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அதிகாரிகள் இத்தனை நாட்கள் கடைப்பிடித்த உத்திகளை ஓரங்கட்டி வேறு திசை நோக்கிச் செல்கின்றனர்.
கொவிட்-19 கிருமியை முழுவதுமாக துடைத்தொழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து மாறி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண் ணிக்கை அதிகரித்ததும் நடப்பில் உள்ள மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிட்டுள்ளனர்.
"இதுவரை முன்னுரைக்கப்பட்டதே நடந்து வருகிறது," என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிளாடிஸ் பெரிஜக்கிலியான் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிட்னியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடுத்த வாரம் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னியில் 1,156 பேர் கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 207 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 89 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும்போதிலும் நியூ சவுத் வேல்ஸ் மக்கள்தொகையில் 70 விழுக்காடு பெரியவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் வர்த்தகம் மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்படக்
கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மாத நடுப்பகுதிக்குள் இந்த இலக்கை ஆஸ்திரேலியா அடையக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

