கேன்பரா: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு முடக்கநிலை அறிவிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஐந்து பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக குவீன்ஸ்லாந்து அதிகாரிகள் கூறினர்.
அடுத்த சில நாட்களில் கிருமிப் பரவல் நிலையைப் பொறுத்து முடக்கநிலை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
"தற்போது ஒரு குடும்பம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. பிறருக்கும் கிருமி பரவியது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்," என்று குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் முதல்வர் அன்னஸ்டேஷியா பலசேசுக் கூறினார். நோய்வாய்ப்பட்ட குடும்பம் பிரிஸ்பன் நகரில் வசிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முடக்கநிலை நடப்பில் உள்ளது. தலைநகர் கேன்பராவிலும் மெல்பர்னிலும் முடக்கநிலை நடப்பில் உள்ளது.
இந்நிலையில், குவீன்ஸ்லாந்திலும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டால் ஆஸ்திரேலியாவின் பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்படும்.
பொருளியல் மந்தநிலை ஏற்படும் ஆபத்தும் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் மேலும் 2,077 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு கடந்த மூன்று மாதங்களாக வீட்டிலேயே இருக்கும் உத்தரவு நடப்பில் உள்ளது. இருப்பினும், நேற்று மேலும் 1,599 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
சமூக இடைவெளி விதிமுறையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அம்மாநில மக்களுக்கு அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.
இருப்பினும், கடுமையான வெயில் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று கடற்கரைக்குச் சென்றனர்.
ஆஸ்திரேலியாவின் அவசரநிலை விதிமுறைகளின்படி வீட்டிலேயே இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும்போது தங்கள் வீட்டிலிருந்து அதிகபட்சம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு மட்டும் மக்கள் செல்லலாம்.
கடற்கரையில் இருப்போர் இந்த விதிமுறையைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்டறிய போலிசார் சோதனையிடுவர் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் பிராட் ஹசார்ட் கூறினார்.

