கோலாலம்பூர்: மலேசியாவில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதன் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் அறிவித்துள்ளார்.
தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் உள்ள அனைத்து மாநிலங்களின் பள்ளிக்கூடங்களும் வரும் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முதல் ஒவ்வொரு வகுப்பும் 50 விழுக்காட்டு மாணவர்களுடன் இயங்கும் என்று அவர் சொன்னார்.
அதே சமயம் தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் நிலையில் உள்ள மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் சொன்னார்.
வாராந்திர சுழற்சி முறையில் ஒவ்வொரு வகுப்பிலும் 50% மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குச் செல்வார்கள்.
ஆனால் பொதுத்தேர்வு எழுதவுள்ளவர்கள், தங்குவிடுதியில் இருந்து படிப்பவர்கள், சிறப்பு தேவையுள்ளவர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் அல்லாமல் அனைத்து நாட்களும் பள்ளிக்
கூடத்திற்குச் செல்வார்கள்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், போட்டுக்கொள்ளாதவர்கள் என அனைவரும் பள்ளிக்குச் செல்லலாம்.
ஒருவேளை பெற்றோர் தங்களது பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்க விரும்பினால், அவர் கள் வீட்டில் இருந்து கற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாணவர்கள் சீருடை அணிந்து வரவேண்டும் என்பது கட்டாயமல்ல, ஆனால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் கல்வி அமைச்சர் சொன்னார்.
சுமார் 2,500 ஆசிரியர்கள் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும் அவர்களுக்கு கற்பித்தலைத் தவிர வேறு பொறுப்புகளைத் தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சொன்னார்.
அதோடு 2022ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் அதுவரை மாணவர்கள் தற்போதைய வகுப்பிலேயே தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 2021ஆம் ஆண்டிறுதி பள்ளி விடுமுறை விடப்படும்.
"மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவதை ஊக்குவிப்பதே தற்போதைய நோக்கம்.
"கிருமிப் பரவல் அபாயங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்கள் படிக்கக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்," என்றார் ஜிடின்.
மலேசிய அமைச்சர்: முகக்கவசம் கட்டாயம்; சீருடை கட்டாயமல்ல

