கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகராக யார் தேர்வு செய்யப்படுவார்் என்று அறிந்துகொள்ள மலேசியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற உறுப்
பினர்கள் வாக்களிக்கவேண்டும்.
ஆனால் இந்த வாக்கெடுப்பு அடுத்த நாடாளுமன்ற அமர்வு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது மலேசியாவின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்.
அப்போது துணை சபாநாய
கருக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. துணை சபாநாயகர்களின் எண்ணிக்கையை இரண்டிலிருந்து மூன்றாக உயர்த்த அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தவே துணைச் சபா நாயகருக்கான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மலேசிய சட்ட அமைச்சர் வான் ஜுனாய்டி துவான்கு ஜாஃபார் கூறினார்.
"துணை சபாநாயகர் பதவிக்கு யாரை முன்மொழியலாம் என அரசமைப்புச் சட்டத்தில் குறிப்
பிடப்படவில்லை. எனவே, புதிய விதிமுறையை நாங்கள் உருவாக்கக்கூடும். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை துணை சபாநாயகர்களில் ஒருவராக நியமிக்க அரமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படக்கூடும்," என்றார் அவர். மலேசிய நாடாளுமன்றத்தில் தற்போது இரண்டு துணை சபாநாயகர்கள் மட்டுமே இருக்கலாம்.
கடந்த மாதம் துணை சபா நாயகர் பதவியிலிருந்து திருவாட்டி அசலினா ஒத்மான் சஹாட்
விலகினார். அவருக்குப் பதிலாக அம்னோவின் தலைமைச் செயலாளரான திரு அகமது மஸ்லானை அப்பதவிக்கு மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. மூன்றாவது துணை சபாநாயகர்
பதவியை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வகிக்கலாம் என்ற யோசனையை திரு அகமது முன்வைத்தார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம், முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் பெற்றுக்கொண்டது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் பொய் வாக்குமூலம் கொடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளைத் திரு அகமது எதிர்நோக்குகிறார். இந்நிலையில், துணை சபாநாயகர் பதவிக்கு திரு அகமதை முன்மொழிந்தது தொடர்பாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் பத்து காஜா தொகுதி நாடாளுமன்ற உறப்பினரான வி. சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே, நம்பிக்கை, விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் மலேசியாவில் நேற்று முன்தினம் முதல்முறையாகக் கையெழுத்திடப்பட்டது. அதில் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் கையெழுத்திட்டனர். ஆட்சி செய்யும் முறையை மேம்படுத்துவது, கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைள், ஜனநாயக அணுகுமுறைகள் ஆகியவற்றில் 18 மாற்றங்கள் நடைமுறைப்
படுத்தப்படும் என்று திரு இஸ்மாயில் தலைமையிலான மலேசிய அரசாங்கம் வாக்குறுதி தந்துள்ளது. அதற்குப் பதிலாக, திரு இஸ்மாயிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலோ அல்லது அரசாங்கம் ஏதேனும் மசோதா தாக்கல் செய்தாலோ எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் அவற்றுக்கு எதிராக வாக்களிக்கக்கூடாது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக்கூடாது.
கையெழுத்திடப்பட்டுள்ள இருதரப்பு ஒப்பந்தத்தைப் பாதுகாக்க ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் நேர்மையுடன் நடந்துகொள்வது மிகவும் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டது.