பெய்ஜிங்: சீனாவின் தொன்கிழக்கு மாநிலமான ஃபுஜியனில் கொவிட்-19 கிருமித்தொற்றால் சமூக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இருமடங்குக்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தின நிலவரப்படி ஃபூஜியன் மாநிலத்தில் மேலும் 59 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
அதற்கு முந்திய நாளில் 22 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த நான்கு நாட்களில், ஃபூஜியன் மாநிலத்தில் மொத்தம் 102 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஒரு வார விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில் சமூக அளவிலான பாதிப்பு அதிகரித்துள்ளது. விடுமுறையின்போது சுற்றுப்பயணிகள் பலர் ஃபூஜியன் மாநிலத்துக்குச் செல்வது வழக்கம். அண்மைய பாதிப்பால் அம்மாநிலத்தின் சுற்றுப்பயணத் துறைக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை ஏற்பட்ட கிருமிப் பரவலால் ஃபூஜியன் மாநிலத்தின் சுற்றுப்பயணத்துறை, உபசரிப்புத்துறை, போக்குவரத்துத்துறை ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இம்மாதம் 10ஆம் தேதியன்று ஃபூஜியன் மாநிலத்தின் பூத்தியேனே நகரில் கிருமித்தொற்று தலைதூக்கியது.
பாதிக்கப்பட்டோரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவர்கள் மிக வேகமாகப் பரவக்கூடிய டெல்டா கொவிட்-19 கிருமிவகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பூத்தியேனே நகரிலிருந்து கடலோர நகரமான சியாமன்னுக்கு கொவிட்-19 கிருமி பரவியுள்ளது. நேற்று முன்தினம் அங்கு மேலும் 32 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இரு நகரங்களிலும் கிருமித்தொற்று அபாயம் உள்ள இடங்கள் மூடப்பட்டுள்ளன.
பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபானக் கூடங்கள் ஆகிய இடங்களும் மூடப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 60 விழுக்காடு விமானச் சேவைகளை சியாமன் நகரம் நேற்று ரத்து செய்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் தரவு வழங்கும் 'வெரிபிளைட்' தெரி வித்தது.

