சோல்: முதல் ஏவுகணைச் சோதனையை நடத்தி ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், அத்தகைய இரண்டாவது சோதனையை வடகொரியா நேற்று மேற்கொண்டது.
தீபகற்பத்தின் கிழக்குக் கடலோரப் பகுதியில் ஆயுதமேந்திய இரு ஏவுகணைகளை வடகொரியா நேற்றுப் பகலில் பாய்ச்சியதாக தென்கொரிய தற்காப்பு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பானிய கடலோரக் காவற்படை வெளியிட்ட அறிக்கையும் அதே தகவலை எதிரொலித்தது. ஜப்பானின் பிரத்தியேக பொருளியல் மண்டலத்திற்கு வெளியே அவ்விரு ஏவுகணைகளும் தென்பட்டதாக அதன் அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த வாரயிறுதியில் நீண்டதொலைவு பாயக்கூடிய புதிய ஏவுகணைகளை வடகொரியா சோதித்துப் பார்த்ததை அடுத்து நேற்றைய சோதனை இடம்பெற்றுள்ளது. ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக, அணுவாயுதத் தாக்குதல்களை நடத்தும் ஆற்றல் தன்னிடம் உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகள் அமைந்துள்ளன.
இதற்கிடையே, அணுவாற்றலுடன் கூடிய வடகொரியாவின் முதல் ஆயுதமாக இந்த ஏவுகணை இருக்கலாம் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா விதித்துள்ள பொருளியல் தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டுமெனில், வடகொரியா தன் அணுவாற்றல், ஏவுகணைத் திட்டங்களை கைவிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அது தொடர்பான பேச்சுவார்த்தை, 2019ஆம் ஆண்டுமுதல் முடக்கநிலையில் உள்ளது.

