சோல்: முதல் ஏவுகணைச் சோதனையை வடகொரியா நடத்தி ஒரு வாரம்கூட ஆகாத நிலையில் நேற்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஒரே வாரத்தில் பியோங்யாங்கின் இரண்டாவது பிரதான ஆயுதச் சோதனை இது.
தீபகற்பத்தின் கிழக்குக் கரைப்பகுதியின் நீரிணையில் வடகொரியா இரு ஏவுகணைகளை நேற்று பகல் பாய்ச்சியதாக தென்கொரிய தற்காப்பு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பானிய கடலோரக் காவற்படை வெளியிட்ட அறிக்கையும் அதே தகவலை எதிரொலித்தது. ஜப்பானின் பிரத்தியேக பொருளியல் பகுதிக்கு வெளியே இரண்டு ஏவுகணைகளும் தென்பட்டதாக அறிக்கையில் அது குறிப்பிட்டிருந்தது. கடந்த வாரயிறுதியில் புதிய நெடுந்தொலைவு ஏவுகணைகளை வடகொரியா சோதித்துப் பார்த்ததை அடுத்து நேற்றைய சோதனை நடந்துள்ளது. ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக, அணுவாயுதத் தாக்குதல்களை நடத்தும் ஆற்றல் தன்னிடம் உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் இந்த ஏவுகணைச் சோதனைகள் அமைந்துள்ளன.
இதற்கிடையே, அணுவாற்றல் கொண்ட நாட்டின் முதல் ஆயுதமாக இந்த ஏவுகணை இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா விதித்துள்ள தடைகளிலிருந்து நிவாரணம் பெற, தன் அணுவாற்றல், ஏவுகணைத் திட்டங்களை வடகொரியா கைவிடவேண்டும் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை, 2019ஆம் ஆண்டுமுதல் முடக்க நிலையில் இருந்து வருகிறது.

