கூச்சிங்: மலேசியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து சரவாக் வருவோர், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், அவர்களுக்குத் தனிமை உத்தரவு கிடையாது என்று சரவாக் அரசாங்கம் நேற்று அறிவித்தது. இது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இருப்பினும், அனைத்துப் பயணிகளும் சரவாக் மாநிலத்திற்குள் வருவதற்கான 'எண்டர்சரவாக்' படிவத்தை நிறைவு செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அத்துடன் சுகாதார உறுதி ஆவணத்தையும் அவர்கள் இணையம் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரத்தையும் அவர்கள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
சரவாக் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன், 'ஆர்டி-பிசிஆர்' பரிசோதனையை அவர்கள் செய்துகொண்டு அதில் கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
இதற்கிடையே, நேற்று மலேசியாவில் பதிவான புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை, மீண்டும் 19,000ஐத் தாண்டியது. சரவாக் மாநிலத்தில்தான் ஆக அதிகமாக, 4,709 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

