மெல்பர்ன்: ஆஸ்திரேலிய போலிசார், அனுமதியின்றி பொதுமுடக்கத்துக்கு எதிராக சிட்னி, மெல்பர்ன் நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கானவர்களில் 267 பேரைக் கைது செய்தனர். மெல்பர்னில் 235 பேரும் சிட்னியில் 32 பேரும் கைதுசெய்யப்பட்டனர். பல போலிஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடந்த கை கலப்பில் காயமடைந்தனர்.
ஆறு போலிஸ் அதிகாரிகளுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டதாக விக்டோரியா மாநிலப் போலிசார் கூறினர். போலிசார் பலர் கீழே தள்ளிவிடப்பட்டதையும் மிதிபட்டதையும் தொலைக்காட்சிகள் காட்டின.
மெல்பர்ன் நகரின் மையப் பகுதி யில் ஆள் நடமாட்டத்தைத் தடுக்க, அங்கு நேற்று 2,000 போலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டதுடன், தடுப்புகளும் சோதனைச்சாவடிகளும் போடப்பட்டன. பொதுப் போக்கு வரத்தும் தனியார் டாக்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இருப்பினும் சுமார் 700 ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு திரண்டனர்.
சிட்னியிலும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் ஜூன் மாதத்தில் தொடங்கிய டெல்டா வகைக் கிருமிப்பரவலால், சிட்னி, மெல்பர்ன், கான்பெரா நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டில் நேற்று புதிதாக 1,882 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1,331 தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. பெரும்பாலானவை சிட்னியில் ஏற்பட்டவை.