லங்காவி: மலேசியாவின் லங்காவி தீவில் உள்நாட்டுச் சுற்றுப்பயணிகள் வர அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தினர்களால் 80% நிறைந்துள்ளதாகவும் சில ஹோட்டல்களில் அறைகள் ஏதும் இல்லை என்றும் மலேசிய ஹோட்டல் சங்கத்தின் கெடா, பெர்லிஸ் பிரிவுக்கான துணைத் தலைவர் திரு ராஸ்மி ரஹமட் கூறினார். சென்ற வியாழக்கிழமை லங்காவி தீவு உள்நாட்டுச் சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டது.
பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சலுகைக் கட்டணம் இருப்பதாலும் விமான நிறுவனங்களுடன் சேர்ந்து அவை கூட்டுத் திட்டங்களை வழங்கியுள்ளதாலும் சுற்றுப்பயணிகள் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். வேறு எந்த சுற்றுலாத் தலமும் திறக்கப்படாததால் கிடைத்த வாய்ப்பைப் பலர் பயன்படுத்திக் கொண்டதாக அவர் கூறினார்.
லங்காவியைத் திறந்து விடும் திட்டம் வெற்றி பெற்றால் மேலும் பல சுற்றுலா தலங்கள் உள்நாட்டுப் பயணி களுக்குத் திறந்துவிடப்படலாம் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.