கோலாலம்பூர்: மலேசியாவில் பெரியவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடும் பணி 80 விழுக்காட்டை எட்டியவுடன் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி மலேசியாவில் 78.2 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
80% முழுமையான தடுப்பூசி என்ற மைல்கல்லை மலேசியா இன்று எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பேசிய பிரதமர் இஸ்மாயில், கூடுதல் தடுப்பூசி போடும் பணியின்போது, முன்னிலை ஊழியர்கள், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.
"குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நோயெதிர்ப்புத் திறன் குறையக்கூடும். எனவே, மூன்றாவது தடுப்பூசி போடுவதன் மூலம் எளிதில் கிருமித்தொற்றுக்கு ஆளாகக்
கூடியவர்களின் நோயெதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்," என்றார் அவர்.
பி40 குழு என்று அழைக்கப்
படுபவர்கள் அல்லது நாட்டில் குறைந்த வருமானம் உள்ளவர்
களுக்கு கொவிட்-19 பராமரிப்புத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அதில் ஆக்ஸிமீட்டர், சுய பரிசோதனைக் கருவி, மீண்டும் பயன்
படுத்தக்கூடிய முகக்கவசம் மற்றும் தெர்மாமீட்டர் ஆகியவை இருக்கும். சுமார் 3.6 மில்லியன் குடும்பங்களுக்குக் கிடைக்கவுள்ள இந்த தொகுப்பிற்காக அரசாங்கம் 471.6 மில்லியன் ரிங்கிட் செலவிட்டுள்ளது.
மற்றொரு நிகழ்வில் பேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அடுத்த மாத தொடக்கத்தில் கூடுதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று சொன்னார்.
அடுத்த மாத இறுதிக்குள் மலேசியா தனது பொருளாதாரத்தை முழுமையாகத் திறக்க திட்டமிட்டுள்ளது. அதற்குள் அனைத்து பெரியவர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து கொவிட்-19 கிருமித்தொற்றை நிரந்தர நோயாக கையாளும் கட்டத்திற்கு மாறு
வதையும் மலேசியா நோக்கமாகக் கொண்டுள்ளது.