சிட்னி: முதலாம், இரண்டாம் உலகப் போர்களின்போது ஆஸ்திரேலிய வீரர்களின் தியாகத்தின் மூலம் பிரான்ஸ் மீதான தனது நேசத்தை ஆஸ்திரேலியா ஏற்கனவே நிரூபித்துள்ளது என்று அந்நாட்டுத் துணைப் பிரதமர் பர்னாபி ஜாய்ஸ் கூறியுள்ளார்.
அதனால் பிரான்ஸ் மீதான அக்கறையும் நேசத்தையும் இப்போது ஆஸ்திரேலியா நிரூபிக்கத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக பிரான்சுடன் இடம்பெற்று வந்த 40 பில்லியன் அமெரிக்க டாலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை ஆஸ்திரேலியா திடீரென ரத்து செய்ததால் பதற்றத்தைத் தணிக்க ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் தெஹான், பிரெஞ்சு வர்த்தக அமைச்சுருடன் பேசப்போவதாகக் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய துணைப் பிரதமரின் சொற்கள் பிரான்சின் கோபத்தை அதிகமாக்கும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவும் பிரிட்டனும் பிரான்சுடனான பதற்றத்தைத் தணிக்க முயற்சி செய்கின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோனுடன் முன்கூட்டியே பேச்சு வார்த்தை நடத்த கோரியுள்ளார்.
இந்நிலையில், பிரெஞ்சு தற்காப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, தாமே முன்வந்து பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் பென் வாலசுடன் இந்த வாரம் நடத்த இருந்த சந்திப்பை ரத்து செய்ததாக பிரஞ்சு தகவல்கள் கூறின.

