புத்ராஜெயா: மலேசியா, 13 வயது முதல் 17 வயது வரையிலான அந்நாட்டு இளையர்களுக்குத் தடுப்பூசி களைப் போடத் தொடங்கியிருக்கிறது. சுமார் 3.2 மில்லியன் பதின்ம வயதினருக்குத் தடுப்பூசி களைப் போட திட்டமிடப்படுவதாக மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று கூறினார்.
பள்ளிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி நிலையங்கள் ஆகியவற்றில் இளையர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் பிரச்சினைகள் உள்ள இளையர்களுக்குத் தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று திரு கைரி தெரிவித்தார்.
வீட்டுத் தனிமைக்கு விண்ணப்பம்
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பட்சத்தில், அவர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ள புதிய இணையத் தளத்தில் விண்ணப்பிக்க முடியும் என்று மலேசிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தனிமைப்படுத்திக்கொள்ள ஏதுவான இடமாக கருதப்பட்டால் மட்டுமே அவர்கள் தங்களது வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும், அவர்கள் 'பிசிஆர்' பரிசோதனையில் 'தொற்றில்லை' எனச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பும் பயணிகள் இன்று 21ஆம் தேதி காலை 8 மணி முதல் www.moh.gov.my என்ற இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மலேசியாவிற்குள் நுழைவதற்கு ஏழு முதல் பத்து நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது. ஏழு நாள்களுக்குள் முடிவு தெரிவிக்கப்படும்.
இம்மாதம் 28ஆம் தேதி முதல் மலேசியாவிற்கு வரும் பயணிகள், புதிய இணையத்தளத்தில் விண்ணப் பிக்கலாம்.
இப்போது மின்னஞ்சல் முகவரி வழியாக அத்தகைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இன்னும் 6,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி கூறினார்.

