கோலாலம்பூர்: மலேசியாவின் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், அந்நாட்டின் முன்னாள் உளவுத் துறையின் தலைவருடன் தொடர்புள்ள வழக்கில் பணத்தைக் கையாடியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த மூவரும், மலேசியாவின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் ஹசானா அப்துல் ஹமீதிடமிருந்து கைப்பற்றப்பட்ட 6 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தில் ஒரு பங்கைக் களவாடியதாகக் கூறப்பட்டது. களவாடப்பட்ட பணத்தில் ஒரு பகுதிக்கு பதிலாக போலி நோட்டுகள் மாற்றி வைக்கப்பட்டன. மூன்று அதிகாரிகளும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
அரசாங்கப் பணம் 50.4 மில்லியன் ரிங்கிட்டை (S$16.3 மி.) கையாடியதன் தொடர்பில் திருவாட்டி ஹசானா மீது 2018ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் சென்ற ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றம் அவரை அந்த வழக்கிலிருந்து நிரபராதி என்று குறிப்பிடாமல் விடுவித்தது.
திருவாட்டி ஹசானா தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தியதையும் முறைகேட்டில் ஈடுபட்டதையும் விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவில் மூன்று அதிகாரிகளும் இருந்தனர் என்று மலேசிய தகவல்கள் கூறின.

