கேன்பரா: உலகத் தலைவர்கள் பங்கேற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மாநாட்டின் போது பிரெஞ்சு அதிபருடன் பேசப் போவதில்லை என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்.
அமெரிக்க-பிரிட்டன் கூட்டுத் திட்டத்தில் அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க ஒப்புதல் அளித்தது ஆஸ்திரேலியா.
இதற்காக பிரான்ஸ் உடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தப் பேச்சு
வார்த்தையை ஆஸ்திரேலியா ரத்து செய்தது பிரான்சைக் கோபமடையச் செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரான்சிற்கு ஆதரவாக அணி திரண்டுள்ள நிலையில் ஆஸ்திரேலிய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அது அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
அக்டோபர் 12ஆம் தேதி ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் அடுத்த கட்ட வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர் பார்ப்பதாக ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் தெஹான் சொன்னார்.
பிரான்சுடனான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு அதிபர் இமானுவல் மெக்ரோனுடன் பேச முற்படும்போது, தான் தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என்று கூறியுள்ளார் மோரிசன்.
"பிரான்ஸ் அதிபருடன் பேசுவதற்கான வாய்ப்பு இப்போது அமையவில்லை. சரியான நேரத்தில் அந்த வாய்ப்பு வரும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் மோரிசன் கூறினார்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் சீனா, வடகொரியாவையும் கோப
மடையச் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் இச்செயல், ஆயுதப் போட்டியைத் தூண்டும் அபாயம் கொண்டது என்று இந்தோனீசியாவும் மலேசியாவும் கூறின.
ஆனால் பிலிப்பீன்சோ ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது வட்டாரத்தில் நிலைத்தன்மையை கொண்டு வர உதவும் என்று அது கூறியது.

