யங்கூன்: இந்திய எல்லை அருகில் உள்ள மியன்மார் நகரமான தந்லாங்கில் மியன்மார் ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை மூண்டது.
கட்டவிழ்க்கப்பட்ட வன்
முறை காரணமாக அங்கு உள்ள பல கட்டடங்கள் தீக்கு இரையாயின.
மியன்மாரின் சின் மாநிலத்தில் இருக்கும் அந்த நகரத்தில் ஏறத்தாழ 10,000 பேர் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தங்கள் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டதை அடுத்து, உயிருக்குப் பயந்து அவர்களில் பலர் அங்கிருந்து தப்பி ஓடியதாக மியன்மார் ஊடகம் தெரிவித்தது.
அவர்களில் சிலர் எல்லையைக் கடந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வீடு ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதை அணைக்க முற்பட்ட கிறிஸ்துவ பாதிரியாரை மியன்மார் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றதாக மியன்மார் நாவ் செய்தித்தளம் தெரிவித்தது.
இதை மியன்மார் ராணுவம் மறுத்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் மியன்மார் ராணுவத்துக்குச் சொந்தமான முகாம் ஒன்றை போராளிகள் தகர்த்தனர்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை மியன்மார் ராணுவம் நடத்தியது.

