வாஷிங்டன்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் கூட்டாக ஆக்கஸ் தற்காப்பு உடன்பாட்டை செய்துகொண்டதால் பிரான்சுடனான உறவு மோசமடைந்தது.
இதனைச் சீர் செய்ய அமெரிக்கா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு ஓரளவு பலன் கிட்டியுள்ளது.
ஆக்கஸ் தற்காப்பு ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு தொழில்நுட்பங்களை ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்குகின்றன.
முதல் கட்டமாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக பிரான்ஸி டமிருந்து நீர் மூழ்கிக்கப்பல்களை வாங்கும் 37 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள பிரான்ஸ், இது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காதது நம்பிக்கைத் துரோகம் என்று சாடியிருக்கிறது.
கோபத்தின் உச்சக்கட்டமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களுடைய தூதர்களை மீட்டுக்கொள்வதாக பிரான்ஸ் அறிவித்தது.
இந்த நிலையில் பிரான்ஸை சமாதானப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனும் புதன்கிழமை அன்று தொலைபேசியில் அரை மணி நேரம் பேசினர்.
அடுத்த மாதம் இறுதியில் ஐரோப்பாவில் மீண்டும் சந்திக்கவும் அவர்கள் இணங்கியுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவிலிருந்து தனது தூதர்களை மீட்டுக் கொள்ளும் திட்டத்தை பிரான்ஸ் கைவிட்டுள்ளது.
ஆனால் இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கும் பிரான்ஸ் செய்யுமா என்பது தெரியவில்லை.
அதிபர் ஜோ பைடன், ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாடு மிக அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் தற்காப்பு உடன்பாடு, தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் முயற்சி என்று தெரிவிக்கப்பட்டது.

