தோக்கியோ: ஜப்பான் முன்பு உறுதி அளித்ததைவிட இரண்டு மடங்கு தடுப்பூசிகளை தானமாக வழங்க முன்வந்துள்ளது.
தேவையான நாடுகளுக்கு மொத்தம் 60 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்தார்.
முன்பு 30 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையிலான கோவாக்ஸ் தடுப்பூசி பகிர்வுத் திட்டத்துக்கு ஒரு பில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும் ஜப்பான் தாராள மனதுடன் உறுதியளித்திருந்தது.
"உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு வட்டாரங்களுக்கும் 23 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.
"தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் நன்கொடையாக வழங்கும் நாடுகளில் ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது," என்று பிரதமர் சுகா பெருமையுடன் குறிப்பிட்டார். ஜப்பான் பெரும்பாலான தடுப்பூசிகளை கோவாக்ஸ் திட்டத்துக்கு வெளியே இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஆசிய நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
ஆனால் இறக்குமதி செய்யப்படும் ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளைப் பெரிதும் நம்பியுள்ள ஜப்பானில் இதுவரை 55 விழுக்காட்டினருக்கு மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

