மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 847 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது, ஒருவர் உயிரிழந்தார். ஆஸ்திரேலியர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் ஆஸ்திரேலிய 'ரூல்ஸ் ஃபுட்பால்' எனப்படும் விளையாட்டுப் போட்டி ஒன்றின் இறுதியாட்டம் நேற்று நடைபெறவிருந்ததை முன்னிட்டு கூடுமானவரை வீட்டில் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இறுதியாட்டத்தில் மெல்பர்னைச் சேர்ந்த இரண்டு அணிகள் மோதவிருந்தன.
கிருமித்தொற்று சம்பவங்கள் வரும் நவம்பர் மாதம் நடுப் பகுதி வரை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு இரண்டு முறை தடுப்பூசி போடும் இலக்கை அதிகாரிகள் கொண்டுள்ளனர்.
தற்போது சுமார் 46 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கின்றனர். தடுப்பூசித் திட்டத்திற்கு எதிராக மெல்பர்னில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இப்போது அந்நகரின் குடியிருப்புப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெல்பர்னின் வடக்குப் பகுதியின் சில இடங்களில் போலிசார் 30க்கும் அதிகமானோரைக் கைதுசெய்தனர்.
ஆர்ப்பாட்டங்களால் கிருமிப் பரவல் மேலும் மோசமடையக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். கடந்த வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த வாரம் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டோரில் 60 பேர் மாண்டனர். ஆனால் புதிதாகக் கிருமித்தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது மெதுவடையும் அறிகுறிகளும் தென்படுகின்றன.