கோலாலம்பூர்: மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணையில் ஹோட்டல் ஒன்றில் 16,000 வெள்ளி ரொக்கமும் சொகுசு வாகனங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஊழல் விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட 8.1 மில்லியன் வெள்ளி பெருமானம் உள்ள சொத்துகள் காணாமற்போனதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கண்டெடுக்கப்பட்ட சொகுசு வாகனங்களும் ரொக்கமும் விசாரணை மேற்கொள்ளப்படும் மூன்று அதிகாரிகளில் ஒருவருக்குச் சொந்தமானவை எனக் கருதப்படுகிறது.
ஊழல் விசாரணை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக மலாய் மெயில் நாளிதழிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சொகுசு வாகனங்கள் ஹோட்டலின் வாகன நிறுத்தத்தில் இருந்தது தெரியவந்திருக்கிறது. வாகனங்களின் பின்னணியை அறிந்துகொள்ள அவற்றின் ஆவணங்களை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் ஆராய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.கண்ெடடுக்கப்பட்ட 16,000 வெள்ளி ரொக்கம், பறிமுதல் செய்யப்பட்ட 8.1 மில்லியன் வெள்ளி பெருமானம் உள்ள சொத்துகளில் ஓர் அங்கமா என்பதை ஆணையம் விசாரித்து வருவதாகவும் உத்துசான் மலேசியா நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் மலேசிய வேவுத் துறை அமைப்பின் முன்னாள் தலைவருக்குச் சொந்தமானவை.
தடுத்து வைக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் உயர்தர மோட்டார்சைக்கிளை வைத்திருந்ததாகவும் சொகுசு வீட்டில் வசித்ததாகவும் சொல்லப்படுகிறது. மூன்று அதிகாரிகளின் சொத்துகள், நிதித் தகவல்கள் அனைத்தும் ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

