பெய்ஜிங்: சீனாவில் பல காலமாக ஆங்கிலம் கற்றுத் தருவதற்கான தேவை அதிகமாக இருந்து வந்திருக்கிறது. அதனால் சீனாவில் பிற மொழிகளைக் கற்றுத் தரும் சேவைகளை வழங்கும் பல துணைப்பாட நிறுவனங்கள் பலனடைந்து வந்தன. ஒரு தேர்வின் முடிவால் மாணவரின் எதிர்காலம் மாற்றியமைக்கப்படலாம். அப்படிப்பட்ட கல்வி முறை இருக்கும் நாட்டில் தங்கள் பிள்ளைகளை முன்னோக்கிச் செல்ல வைக்கப் பல பெற்றோர் அத்தகைய நிறுவனங்களின் சேவைகளை நாடினர்.
ஆனால் வெளிநாடுகளிலிருந்து துணைப்பாட ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கக்கூடாது என்ற சட்டத்தைச் சீனா சென்ற மாதம் நடைமுறைப்படுத்தியது. மேலும், துணைப்பாடச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் தளங்களும் தங்களின் வர்த்தக முறையை லாப நோக்கமற்றதாக மாற்றவேண்டும். மாணவர்களின் மனவுளைச்சலையும் கல்விச் செலவையும் குறைக்கப் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங் கூறியது.
பெற்றோர் எதிர்கொள்ளக்கூடிய நெருக்குதலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் அது ஏன் திடீரென நடைமுறைப்படுத்தப் படவேண்டும் என்றும் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கவேண்டும் என்றும் சில ஆசிரியர்கள் கேட்கின்றனர்.
ஆனால் வெளியிலிருந்து எந்தத் தாக்கமும் பிள்ளைகள் மீது விழாமல் இருக்கத்தான் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். வகுப்பறைகளில் சோஷியலிஸ்ட் சித்தாந்தத்தைச் செயல்படுத்த பெய்ஜிங் முயற்சி செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
2017ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து வந்த 400,000 ஆசிரியர்கள் சீனாவில் வேலை செய்துகொண்டிருந்தனர்.
எனினும், கொவிட்-19 சூழலாலும் எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதாலும் அவர்களில் சிலர் சீனாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.
பேச்சுப் பாடங்களை வெளிநாட்டு ஆசிரியர்கள் நடத்துவதையே பல சீனப் பெற்றோர் விரும்புகின்றனர். குறிப்பாக ஆங்கிலப் பாடங்களுக்கு இது பொருந்தும். ஆங்கில துணைப்பாட வகுப்புகளுக்கான தேவை சீனாவில் பெரிய அளவில் இருப்பதால் இதன் தொடர்பில் அங்கு கள்ளச் சந்தை வளர்ந்து வருவதாகவும் துணைப்பாட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய விதிமுறைகளைக் கருத்தில்கொண்டு சீனாவில் வாழும் வெளிநாட்டு ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியிலும் சில நிறுவனங்கள் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

